வவுனியா, உலுக்குளம் பகுதியில் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உலுக்குளம் குளக்கட்டு பகுதியில் நேற்று மாலை மீன்பிடிப்பதற்காக பயணித்த ஒருவர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு ஆயுதங்கள் சில இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து உலுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த கைக்குண்டு மற்றும் ரி 56 ரக துப்பாக்கி மகசின்கள் இரண்டினை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கைக்குண்டை நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், உலுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (007)