ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனவும், ஜனநாயக ரீதியான புதிய நாட்டை உருவாக்க எதிர்பார்க்கிறோம் எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, கட்டுமானத்துறையில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு, பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மூன்று பிரதான கட்சிகளின் தலைமையிலும் புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன. நாங்கள் யாரையும் ஒழித்துக்கட்டவில்லை.
வெள்ளை வான் அச்சுறுத்தல்கள் அற்ற, நீதித்துறை மீதான நெருக்குதல் இல்லாத ஜனநாயக ரீதியான புதிய நாட்டை உருவாக்கவே எதிர்பார்க்கிறோம்.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால், எமக்கு சர்வாதிகாரம் வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை. அதற்கு, எமக்கு ஜனநாயகமும் ஒழுங்கு முறைகளுமே அவசியம். இவை இரண்டினூடாகவே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும். என குறிப்பிட்டுள்ளார். (சி)