மன்னார் மடுத்திருத்தல ஆவணித் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான அவசர மீளாய்வு கூட்டம், மடு ஜோசப்வாஸ் கோட்போர் கூடத்தில், இன்று இடம்பெற்றது.
மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மடு பிரதேச செயலாளர், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகள், இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆவணி மாத திருவிழா, கடந்த 6 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியுடன், திருவிழா நிறைவு பெறவுள்ளது.
மடுத் திருத்தலத்திற்கு செல்லும் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு, அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள், குடி நீர், சுகாதாரம், மருத்துவம் உட்பட பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆராயப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, பக்தர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், பொலிஸ், இராணுவம், கடற்படையினர் இணைந்து மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. (சி)