வட மாகாணத்திலும், வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய காலநிலை தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.(மு)