வவுனியாவில், பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில், இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடி அமாவாசை வழிபாடு சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில், ஈழத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகிய வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயம் வரலாற்று சிறப்பு மிக்கதும், செட்டிகுளம் பிரதேசத்தின் ஆரம்ப ஆலயமாகவும் கருதப்படுகின்றது.
இந்த தொண்மை வாய்ந்த ஆலயத்தில், இந்துக்கள் தமது தந்தையர்களுக்கு பிதிர்க்கடன் செலுத்தி வழிபடும் விசேட தினமாகிய ஆடி அமாவாசை, இன்று சிறப்பாக இடம்பெற்றது.
வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரனின் வழிப்படுத்தலில், ஆலயத்தின் பிரதம குரு ராஜேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட அபிசேகம் மற்றும் பிதிர்க்கடன் பூஜைகள் இடம்பெற்று, சந்திரசேகரீஸ்வரப் பெருமாள் வெளவாலை தீர்த்தக் கேணியில் ஆடி அமாவாசை தீர்த்தம் ஆடினார்.
இதில் பெருமளவான இந்துக்கள் கலந்துகொண்டு தமது இறந்த தந்தையர்களுக்கு பிதிர்க்கடன் செலுத்தி, சந்திரசேகரீஸ்வரப் பெருமானின் அருட்காடாச்சங்களைப் பெற்றுக்கொண்டனர்.
வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சண்முகானந்தம், மாவட்ட காலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி, செட்டிகுளம் பிரதேச இந்து சமய கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், செட்டிகுளம் கலாசார உத்தியோகத்தர் சச்சுருவேணு மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டனர். (சி)