முல்லைத்தீவு மாவட்ட நெய்தல் இயற்கை உரத் தயாரிப்பு தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்று 30 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கிராம சக்தி மக்கள் கருத்திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் இளைஞர்களால் செயற்படுத்தப்பட்ட நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடம்பெற்று 30 லட்சம் ரூபாய் பரிசை பெற்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்த திட்டங்களில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உதயம் இளைஞர் கழகத்தினர் மேற்கொண்ட நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்று 30 லட்சம் ரூபாய் பண பரிசை பெற்றுக்கொண்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட இளைஞர் கிராமசக்தி மக்கள் கருத்திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள், பணப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற குருநாகல் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றது.
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் குறித்த திட்டம் மூன்றாம் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டு 30 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களிடம் வழங்கப்பட்டது.
பண பரிசிலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக அதிகாரிகள், குறித்த திட்டத்தை நடைமுறைப் படுத்திய முல்லைத்தீவு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி வு.ரதீசன், கிராம அலுவலர், இளைஞர் கழகத்தினுடைய இளைஞர்கள் சென்று பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை மாவட்ட ரீதியான வெற்றிக்கான பரிசுகளாக முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற நெய்தல் திட்டத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெருமதியான காசோலையும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு 4 லட்சம் ரூபா பெறுமதியான காசோலையும், மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட துணுக்காய் பிரதேசத்திற்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான காசோலையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. (நி)