தமிழகம், இராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்பகுதிக்குள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நம்புதாளையைச் சேர்ந்த சங்கர், நாகூர், கிரசைன், ராஜூ, சித்தி, பாலமுருகன் ஆகிய 6 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை கச்சதீவு அருகே இந்திய கடல்பகுதியில் குறித்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் மீனவர்களின் கட்டுப்பாட்டை இழந்த நாட்டுப்படகு, இலங்கை கடல் எல்லைக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் கச்சதீவு அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நாட்டுப்படகை கைப்பற்றி, மினவர்கள் ஆறுபேரையும் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு கொண்டுசென்றனர்.
பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குறித்த ஆறு மீனவர்கள் மீதும் இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் வெளிநாட்டுப்படகுகளுக்கு தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவுசெய்து, ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். விசாரணை நடாத்திய நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் குறித்த மீனவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். (நி)