கிளிநொச்சி இரணைதீவு மக்கள், இன்று, இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘கொரோனா’ தொற்றுக் காரணமாக உயிரிழப்பவர்களை, இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, இரணைமாதா நகர் பகுதியில், மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும், இரணைதீவு பகுதியில், உடல்களை அடக்கம் செயற்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இரணைதீவு பிரதான இறங்குதுறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில், மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர் வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட, பல தரப்பட்ட தரப்பினருக்கு, இரணைதீவு மக்களால், நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.
இருப்பினும், இரணைதீவு பகுதிக்கு செல்லும் மக்களிடம், கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும், தீவுப் பகுதியில் வசிக்கும் மக்கள், தீவுக்கு செல்வதற்கு முன்னர், அடையாள அட்டையை, கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும், மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.