வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் நல்லூரில், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். நாவலர் வீதியிலுள்ள, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகம் முன்பாக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற, விசேட மாகாண கணக்காய்வு குழுக்கூட்டம் தொடர்பாக, உண்மைக்கு புறம்பான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருவதற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் ஸ்திரப்படுத்தப்படல் வேண்டும் எனவும் கோரியும், இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மிக மன வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் கவலை வெளியிட்ட ஊழியர்கள், இந்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான மகஜர்களை, அவர்கள் சார்பில் அந்தந்த அலுவலக உயர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. (சி)