நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களின் அமோக வரவேற்பைபெற்றுள்ள ‘சுவசெரிய’ இலவச அம்புலன்ஸ் சேவை நாடளாவியரீதியில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்திலும் இலவச ‘சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை வழங்கும் நோக்கில் புதிய அம்புலன்ஸ்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் தயாகமகே தலைமையில் அண்மையில் அம்பாறையில் நடைபெற்றது.
இதற்கமைவாக இத்திட்டத்தின் நன்மைகளை மக்கள் மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் விளக்கமளிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு இன்று வருகை தந்த இலவச ‘சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை உத்தியோகத்தர்கள் தமது சேவை தொடர்பில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் முன்னிலையில் விளக்கங்களை வழங்கினர்.
தமது சேவை தொடர்பில் உத்தியோகத்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்முறை பயிற்சியை வழங்கியதுடன் பொது மக்களுக்கும் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
மேலும் இச்சேவையினை மக்கள் 24 மணிநேரமும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் 1990 எனும் தொலைபேசிக்கு அழைத்து இச்சேவையினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
அத்தோடு குறித்த அம்புலன்ஸ் வண்டியிலுள்ள கருவிகள் தொடர்பாகவும் அவற்றை பயன்படுத்தி முதலுதவி வழங்குதல் தொடர்பாகவும் கூறியதுடன் சில உத்தியோகத்தர்களின் உடல்நிலை பரிசோதனையையும் மேற்கொண்டனர்.