முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண்ணொருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் சட்ட விரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக, புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் அந்த பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட காணி உரிமையாளர், பெண்ணொருவர் அடங்கலாக 14 பேரை கைது செய்தனர்.
கைதானவர்களிடமிருந்து நிலத்திலிருந்து பொருட்களைக் கண்டறியும் கருவி, கமரா, மடிக்கணனி உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றியதுடன், அவர்கள் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று கார்;களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, தம்புள்ள, மாத்தளை, சாவகச்சேரி, கலேவெல போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (நி)