ரஷ்யாவுடனான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த துருக்கி ஜனாதிபதி, அமெரிக்காவின் நெருக்கடியை ஏற்று, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்ற கூறினார்.
குறித்த ஏவுகணைகளை வாங்கிப் பயன்படுத்துவது என்பது துருக்கியின் இறையாண்மை தொடர்பான விவகாரம் என்றும், எனவே, அந்த இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அந்தத் திட்டம் கைவிடப்படாது என்றும் கூறினார்.
திட்டமிட்டவாறு ரஷ்யாவிலிருந்து எஸ்-400 ஏவுகணைகள் அடுத்த மாதம் வர ஆரம்பிக்கும் என்றும் கூறினார்.
துருக்கியின் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு எந்த நாட்டின் அனுமதியும் நமக்குத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தாக்க வரும் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தரையிலிருந்து பாய்ந்து இடைமறித்து அழிக்கும் அதிநவீன எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஒப்பந்ததைக் கைவிட துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மறுத்துவிட்டார்.
அதற்குப் பதிலடியாக, துருக்கிக்கு தனது அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ள சூழலில், எர்டோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். (நி)