மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில், கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் அழிவடைந்த, புனித அந்தோனியார் ஆலயத்தினை மீள கட்டுவதற்காக இன்று பகல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலய அருட்தந்தை அன்ரனி டிலிமா தலைமையில் நடைபெற்ற இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் குகநாதன், உன்னிச்சை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
உன்னிச்சை, நெடியமடு கிராமத்தில் அமைந்துள்ள இவ் அந்தோனியார் ஆலயத்தில், கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் இங்குள்ள மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் அக் காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணத்தால் இவ் ஆலயம் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)