தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு, தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில், இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பட்டப் படிப்பொன்றை அல்லது டிப்ளோமா பாடநெறி ஒன்றை, 2019-12-31 ஆம் திகதி பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.
அத்தினத்திற்கு 35 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரி, விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில், நிரந்தரமாக வசிப்பவராகவும், மேற்படி திகதிக்கு கிட்டிய மூன்று வருட காலப்பகுதியில், தொழில் ஒன்றில் ஈடுபடாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு சான்றிதழின் புகைப்படப் பிரதி ஒன்று, மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை, சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உண்மையான பிரதி என்பதை உறுதிப்படுத்தி, எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை தபால் திணைக்களத்தின், ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவையின் ஊடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு – 01 என்ற முகவரிக்கு, விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில், ‘பட்டதாரி, மாவட்டத்தின் பெயர் என்றும், டிப்ளோமாதாரி, மாவட்டத்தின் பெயர் என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தெரிவு செய்யப்படுபவர்கள், கல்வி அமைச்சின் கிராமிய தோட்டப் பாடசாலைகள், நீர்ப்பாசன திணைக்களம், கம நல சேவைகள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுதேச மருத்துவ ஆயுர் வேத திணைக்களம், கிராமிய வைத்தியசாலைகள் ஃ மருத்துவ நிலையங்கள், நில அளவை திணைக்களம், விவசாய திணைக்களம், சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம், விலைமதிப்புத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகிய துறைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.
இந்த நிலையில், ஒரு வருட பயிற்சிக் காலத்தில், 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
நியமனங்கள் மாவட்ட மட்டத்தில் வழங்கப்படுவதுடன், முதலாவது நியமனம் வழங்கப்படும் மாவட்டத்தில் ஐந்து வருடங்கள் சேவை செய்வது கட்டாயமானதாகும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (சி)