உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் மாவட்டத்தில் முதல் நிலையினைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், புனித மைக்கேல் கல்லூரி பெருமளவான வெளியீடுகளைப்; பெற்று முதல் இடம் வகிக்கின்றது.
புனித மைக்கேல் கல்லூரி மாணவன் மனோகிதராஜ் ஜுட் சுரன்ராஜ் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69வது இடத்தினையும் பெற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் இம்முறை மருத்துவத்துறைக்கு பத்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொறியியல் துறைக்கு எட்டு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் சிவபாதசுந்தரம் ஜதுயன் 3 ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் மருத்துவத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் சிறுவயது முதல் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவுடன் முயற்சிகளை மேற்கொண்டுவந்ததாகவும் இன்று அது நிறைவேறும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மனோகிதராஜ் ஜுட் சுரன்ராஜ் தெரிவித்தார்.