பொன்னறுவையில், ஜனாதிபதி தலைமையில் பொசன் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பொலன்றுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அன்னதான நிகழ்வு, 59ஆவது தடவையாக நேற்று நடைபெற்ற நிலையில் இன்றும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் இடம்பெறுகின்றது.
நேற்றைய அன்னதான நிகழ்வை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்த பொசன் மாத பௌர்ணமி தினத்தை கொண்டாடும் வகையில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்குச் செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் வருடாந்தம் இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இதற்கமைய நேற்றைய நிகழ்வில், மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் அன்னதான நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொலன்னறுவை இசிப்பத்தனாராம விகாராதிபதி சங்கைக்குரிய உடகம தம்மானந்த நாயக்க தேரரினால் விசேட சமய உரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொலன்னறுவைக்குச் சென்ற பெரும் எண்ணிக்கையான மக்கள் அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அவர்களுக்கு ஜனாதிபதி, அன்னதானங்களை வழங்கிவைத்து, மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.
இந்த அன்னதான நிகழ்வு இன்றும் இரவு பகல் நிகழ்வுகளாக பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் இடம்பெறுகின்றது.
வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் செயலாளர் டப்ளியு.ஜி.சோமரத்ன, பொருளாளர் அனுர விஜேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.