தேயிலை தோட்டங்களில், சிறந்த போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சமூக மேம்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நுவரெலியா ஹட்டன் லா எடம்ஸ் சுற்றுலா விடுதியில், இன்று நடைபெற்றது.
தோட்டப்புறங்களில் சிறந்த போசாக்கு நிகழ்ச்சி திட்டம், கடந்த 2016 ஆண்டு, அரசார்பற்ற நிறுவனமான சேவ் த சில்ரன் நிறுவனத்தின் ஏற்பாட்டில், நுவரெலியா, கண்டி, மாத்தளை, காலி ஆகிய 5 மாவட்டங்களில் 104 தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த 5 மாவட்டங்களிலும் 63 சமூக மேம்பாட்டாளர்கள் திட்டங்களை முன்னெடுத்தனர். இந்த நிலையில், இவர்கள் இன்று, சான்றிதழ்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சேவ் த சில்ரன் நிறுவன செயத்திட்ட முகாமையாளரும் வைத்தியருமான வைத்தியர் ரவி வர்மா ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், உதவி பணிப்பாளர் ஆரோன் ஹவுக்கின், அம்பகமுவ மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது உரையாற்றிய கண்டி மாவட்ட வைத்திய பணிப்பாளர் சிதர்சினி பெரியசாமி, மலையகத்தில், மந்த போசனம் அதிகரிக்க மொழியே காரணம் எனவும், விடயங்கள் சரியாக மக்களை சென்றடையவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இன்று அரசாங்கம், சுகாதார துறையில் எத்தனையோ சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளன.
தோட்டங்களிலும் இந்த நடவடிக்கைகள், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என பலராலும் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் தோட்டப் பகுதியில் தான் அதிகமான மந்த போசனம் அதிகமாக காணப்படுகின்றன.
இதற்கு காராணம், தோட்டப் பகுதியில் பாரிய அளவில் சுகாதார திட்டங்கள் முன்னெடுத்த போதிலும், அவர்களுக்கு தங்களுடைய மொழியில், அதாவது தமிழ் மொழியில் வழங்கப்படாததன் காரணமாக, அவை முழுமையாக சென்றடையவில்லை என்பதனை, நான் எனது அனுபவங்கள் ஊடாக அறிவேன்.
தோட்டங்களில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த போசாக்கு நிகழ்ச்சி திட்டம் காரணமாக, பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, மாவட்ட வைத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனுடைய விளைவுகளை நாளை காண முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் இவற்றின் பிரதி விளைவுகள் தெரியவரும்.
அது மட்டுமல்லாது இன்று சுகாதார துறைக்கு பலர் வரக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்திட்டங்கள் காரணமாக, சுகாதார துறையில் அடுத்த மாதமளவில், சுகாதார இணையத்தளத்தில் ஒன் லைன் ஊடாக பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. அதற்கு அனைவரும் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். என கண்டி மாவட்ட வைத்திய பணிப்பாளர் சிதர்சினி பெரியசாமி குறிப்பிட்டுள்ளார். (சி)