நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்றின் நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று மென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் யாழ்ப்பாணம், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.(நி)