தற்போதய இலங்கையின் அரசியல் கள நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல் தொடர்பில் ஆராயும் வகையில் அரசியல் புரட்சிகர முன்னணியின் மகா சபைக் கூட்டமும் இவ் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றும் நேற்று சாய்ந்தமருது தனியார் விடுதியில் நடைபெற்றது.
அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் தற்போதய அரசியல் நிலமை விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா, இந்த கட்சியின் மூலம் கிடைக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு சாய்ந்தமருது நகரசபையை மலரசெய்ய போவதாகவும், கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்க்க தாம் எல்லை வரைபுகள் வரைந்து தயாராக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்த அரசியல் புரட்சிகர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க இருக்கும் உறுப்பினர் ஆசனத்தில் தலைவராகிய நான் ஆறு மாதங்கள் இருப்பதுடன் என்னுடைய விருப்பின் பேரில் இன்னும் ஆறு மாதம் தமிழ் மகன் ஒருவரை உறுப்பினராக அனுப்புவதுடன் மீதி காலங்களை சமனாக பிரித்து மகா சபை உறுப்பினர்களுக்கு வாக்கின் அடிப்படையில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தான் கல்முனை சாஹிரா கல்லூரி அதிபராக இருந்த போது என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் வாக்களிக்க தயாராக உள்ளதாகவும் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். (007)