பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று பிற்பகல் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை, பிரதமரின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
வைத்தியசாலையில் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு, போராட்டகாரர்கள் செல்ல முற்பட்ட போது, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் பொலிஸார் தடையை ஏற்படுத்தியமையால், ஏ9 வீதி சிறிது நேரம் முடங்கியது.
இன்றுடன் 907 ஆவது நாட்களாக, சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களினால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது போராட்ட களத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், வவுனியா நீதிமன்ற வீதி வழியாக, வைத்தியசாலை சுற்றுவட்டத்தை சென்றடைந்ததும், விஷேட அதிரடிப்படையினர், பொலிசார், கலகம் தடுப்பு பொலிசார், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியதுடன், பேரூந்தை குறுக்கே நிறுத்தி, வீதியையும் தடை செய்தனர்.
இதன் போது, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.பி.வெலிகள, போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன், கலந்துரையாடலை மேற்கொண்டார்.
சுமார் 30 நிமிடத்தின் பின்னர், காணாமல் போன உறவுகளின் போராட்ட களத்திற்கு, பிரதமரை அழைத்து வருவதாக, பொலிசார் வாக்குறுதி வழங்கியதை அடுத்து, காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமது போராட்ட களத்திற்கு திரும்பியுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதான கண்டி வீதி வழியாக தனது பயணத்தை மேற்கொள்ளாமல், வவுனியா மணிக்கூட்டு கோபுரம் ஊடாக, பஜார் வீதி வழியாக, இலுப்பையடி சென்று வைத்தியசாலையை அடைந்ததாக, மக்கள் குறிப்பிட்டுள்ளனர். (007)